Tuesday, August 21, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - இந்த வாரம்..

இந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது.

ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007 அன்று மதியம் அல்லது மாலை நடக்க இருக்கும் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

* பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார்
* டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல்

மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

சந்திப்பின் இடமும் சரியான நேரமும் குறித்து சென்னைப் பட்டினத்தில்்..

<இன்று இணையம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முன்னோட்டமாகவும், உங்கள் நாட்காட்டியில் குறித்துக்கொள்ளவுமே இந்த அறிவிப்பு!>

Wednesday, August 15, 2007

வாழ்த்துக்கள்

போன வருடம் இதே நாளில் தான் நான் அலுவல் தொடர்பான வெளிநாட்டுப் பயணம் முடிந்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தேன்.. நல்லா சாப்பிட்ட களைப்பு தீர தூங்கி எழுந்து மதியம் போல போன் செய்த போது தான் அருள் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியைச் சொன்னார்.

2006 ஆகஸ்ட் 15 அன்று தி.நகர் நடேசன் பூங்காவில் வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பொன்று நிகழ்ந்தது.. அதுவரை சென்னையில் அதிகம் சந்தித்திராத வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கவும், இன்று பதிவர் பட்டறை நடத்தும் அளவில் விரிவடையவும், ஒரு விதத்தில் முதல் விதையாக இருந்த அந்தச் சந்திப்பில் அருள்குமார், ஜெய், பாலபாரதி, ப்ரியன், மதுமிதா, சிங். செயக்குமார், குப்புசாமி செல்லமுத்து, மா.சிவகுமார், வீரமணி என்று பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான நண்பர்களே குழுமியிருந்தார்கள். காலை நடேசன் பூங்காவில் மொக்கை போட்டு அங்கே இருந்த ஒரு வயதானவரின் தூக்கத்தைக் கெடுத்த பின்னர் மாமல்லபுரம் கடற்கரைக்கோயிலை நோக்கிய ஒரு சிற்றுலாவும் இருந்தது.. (இது பற்றிய முழு அறிக்கையைப் படிக்க கிலுகிலுப்பையிலிருந்து தொடங்குங்கள்)

சந்திப்பின் நீட்சியாகத் தான் அடுத்த ஒரு மாதத்தில் நடந்த நாகேஸ்வரராவ் பூங்கா சந்திப்பும், நவம்பரில் மயிலையில் முதன்முதலில் நிகழ்ச்சி நிரலுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மற்றொரு சந்திப்பும் என்று மெல்ல சென்னையிலும் வலைஞர் சந்திப்புகள் தயக்கமின்றி நடைபெறத் துவங்கின. நடேசன் பூங்காவில் சந்தித்தவர்களில் சிலர் சேர்ந்து தொடங்கிய சென்னைப்பட்டினம் கூட்டு வலைப்பதிவும், நவம்பர் சந்திப்பில் உருவான தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கமும் என்று கூட்டுமுயற்சிகளுக்கான விதைகளும் இந்த சந்திப்புகளில் தான் உருப்பெற்றன..

சரி, ஒரு வருடம் முன்னால் நான் போன் செய்த போது, இந்த உருப்படாத மொக்கைகளைப் பற்றி எல்லாம் அருள் பேசவில்லை.. காலை நடேசன் பூங்கா சந்திப்பில் உருவான பா.க.ச என்று அன்பாகவும், பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று சுருக்கமாகவும் அழைக்கப்படும் இயக்கத்தைப் பற்றித் தான் அருள் தகவல் சொன்னார். அருள் சொன்ன உடனேயே அதில் தொலைபேசி மூலமே உறுப்பினராகி அட்டை வாங்கி இரண்டாவது உறுப்பினராக சேர்ந்த பொறுப்புள்ள மகளிரணித் தலைவி என்ற முறையில் பா.க.சவின் ஆண்டுவிழா பற்றிய இந்த இடுகையைக் கொஞ்சம் மகிழ்ச்சியுடனே இடுகிறேன்..

பா.க.ச மகளிரணியின் பிற முக்கிய தலைவிகள் :
* முதல் முதலில் சேர்ந்த founder உறுப்பினர்களில் ஒருவரான மதுமிதா
* கனடா - மதி கந்தசாமி
* மதுரை - லிவிங் ஸ்மைல் வித்யா
* சென்னை - கவிதா மற்றும் அனிதா
* பின்னூட்ட சூறாவளி சேதுக்கரசி
* கவிஞர் தமிழ்நதி

பாருங்க, உண்மையான சனநாயக இயக்கமான பாகசவில் எல்லாரும் தலைங்க தான்.. கிட்டத்தட்ட ஐம்பது தலைவர்களுக்கு மேல் இருந்தாலும் சரியளவு தலைவிகள் இல்லை என்பதை மனதில் கொண்டு உங்களுக்கான இடத்தைப் பிடிக்க தோழிகளே, சீக்கிரம் முன்பதிவு செய்யுங்க..

ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் பகுதியான பாகச போட்டியிலும் பங்கு கொண்டு உறுப்பினர் அட்டை வாங்கலாம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.. எனவே.. மக்கள்ஸ் ஸ்டார்ட் மிசிக்...

எல்லாருக்கும் இனிய பாகச ஆண்டுவிழா வாழ்த்துக்கள்!!!

தொடர்புடைய பதிவு : பா.க.சவில் சேர்வது எப்படி?